
ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில், பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றியவள். இவள் விஷ்ணுவை மணந்து, பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராம அவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டு, தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவனின் மனம் கோணாமல் நடந்தவள். அந்த தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் வரலட்சுமி விரதம் நோற்கப்படுகிறது.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாக பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களையும் வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமைமிகுந்தவள். அதர்வண வேதத்தில் லட்சுமிதேவி அனைவருக்கும் நன்மையே செய்வாள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் லட்சுமி தேவியால் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும் அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் நிற பட்டு உடுத்தி காட்சி தருவாள். கணவனின் இதயத்தில் குடியிருப்பவள். பெருமாள் கோயில்களில் லட்சுமி ஆரத்தை மார்பில் அணிவித்து இருப் பார்கள். பெண்களுக்கே உரித்தான கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு இவள் அதிபதி. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். நாம் பிறருக்கு அறிந்தோ, அறியாமலோ செய்த துன்பங்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் விலகும்.
சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் கூறினாள். பின்பு ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவதும், வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானது. குடும்பத்தில் மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கு வரலட்சுமி விரதம் சிறந்த பலன் தரும்.
விரத முறை: இந்த விரதம் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபத்தை எழுப்பவேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி முகத்தை, தாழம்பூ சூட்டி ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கக்காசுகள் (முடியாவிட்டால் மஞ்சள் செவ்வந்தி) வைத்து சிலைக்கு புதிய மஞ்சள் நிற ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தில் சந்தனம் குங்குமம் இட வேண்டும். கும்பத்தின் மேல் மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின்பு ஐந்து வகை ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.
கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மஞ்சள் கயிறை வலதுகையில் கட்டவேண்டும். நைவேத்யமாக அம்மனுக்கு கொழுக் கட்டை படைக்கலாம். பூஜைக்குப் பின்பு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மறுநாள் லட்சுமி உருவத்தை நீர் நிலையில் கரைத்துவிட வேண்டும். அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு போல இன்றும் தங்க நகைகள் வாங்க நல்ல நாள். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக